புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாக 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணியளவில் பிரதமர் சென்னை வந்தார். பின்னர் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி சென்றடைந்தார். அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்பளித்தார்.
பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
ரூ. 4,000 கோடி அளவிலான திட்டங்கள் தொடக்கம்
ரூ.2,426 கோடி மதிப்பில் சட்டநாதபுரம் - நாகை இடையிலான என்.எச். 45-ஏ என்ற தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஜிப்மர், காரைக்கால் வளாகத்தில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டுவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும், இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம்அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ஜிப்மரில் ரத்த சேமிப்பு மையம் திறப்பு
ஜிப்மரில் ரூ. 28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், மகளிர் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு ஆணையத்தால் லாசுப்பேட்டையில் ரூ. 11.85 கோடியில் கட்டப்பட்ட 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ. 14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டடம் ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைத்தார்.