தமிழக முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா மறைவிற்கு மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் ஆளுநரான ரோசய்யா சனிக்கிழமை காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள்நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ முன்னாள் ஆந்திர முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.