விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கண்காணிப்பு அதிகாரி ஹர்விந்தர் சிங் உள்ளிட்டோர் மரக்காணம் பகுதியில் முகாமிட்டு மீட்புப் பணியை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக காலை 7 மணி முதல் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. பகல் 11 மணி அளவில் வழக்கமான மழை பெய்ய தொடங்கியுள்ளது.
கடற்கரையை ஒட்டிய மரக்காணம்-கோட்டகுப்பம் வரை கடலோரப் பகுதியில் மட்டும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. எனினும் மாவட்டம் முழுவதும் 8 மில்லி மீட்டர் அளவில் மட்டுமே மழை பதிவாகி உள்ளது.
கடல் அரிப்பால் சேதமடைந்துள்ள குடியிருப்பு.
விழுப்புரம் மாவட்ட பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயங்கவில்லை, பேருந்து நிலையங்கள் நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பெரிய அளவில் மழை இல்லை எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கம்போல் கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையம் பகுதியில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு 5க்கும் மேற்பட்ட ஆளில்லாத பழைய மீனவர் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.