நாமக்கல்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது.
இதன்கராணாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், மோகனூர், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் என மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக கடைகள் திறக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் இயங்கவில்லை. மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பேருந்து, ரயில், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. நாமக்கல்லின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமும் இல்லை. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதை காணமுடிந்தது. அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படவில்லை. அம்மா உணவகங்கள் மட்டுமே வழக்கம்போல இயங்கின.
திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரையில் இந்த முழு முடக்கம் அமலில் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.