கேரளத்தில் ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மேலும், இது விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ள உள்துறை, இதைப் பின்பற்றித் தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் என்று பிற மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
முடி திருத்தகங்கள், உள்ளூர்ப் பணிமனைகள், உணவகங்கள் போன்றவற்றைத் திறக்க அனுமதித்துள்ள கேரள அரசின் முடிவுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், மாற்றியமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கை மீறுவதால் மோசமான விளைவுகள் நேரிடலாம் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதமொன்றையும் ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு கேரளத் தலைமைச் செயலருக்குத் தனியே ஒரு கடிதத்தையும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா எழுதியுள்ளார்