தலைமை ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஆசிரியை ஒருவர் பெங்களூருவில் மார்ச் 1-ம் தேதி, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியது.
தனியார் பள்ளியொன்றில் ஆங்கில ஆசிரியையாக பணி புரிந்து வந்தார் மடலீனா (45). எல்.கே.ஜியிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடங்களை கற்பித்து வந்தார். மடலீனாவின் கணவர் பிரான்சிஸ், தன் மனைவியின் மரணம் குறித்த தகவல்களை தற்போது ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
சில தினங்கள் முன்னர் தனது மனைவி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது அழுது கொண்டே வந்தார் என்றும், அதற்குக் காரணம் அன்று தலைமை ஆசிரியர் மடலீனாவை தன் அறைக்கு அழைத்து கடுமையாக விமரிசித்துள்ளார் என்றும் கூறினார். மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்கத் தெரியவில்லை என்றும், இந்தச் சின்ன குழந்தைகளுக்கு கூட பாடம் எடுக்கத் தெரியவில்லை என்றால், எங்காவது போய் செத்துவிடு என்று கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். மேலும் மடலீனா அடுத்த நாள் முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரான்சிஸ் தனது மனைவிக்கு ஆறுதல் கூறி, சர்ச்சில் இது குறித்துப் பேசி இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். அந்தப் பள்ளி சர்ச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மடலீனா தனது அறைக்குப் செல்ல, பிரான்சிஸ் கீழ் வீட்டு பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அதன் பின் அவரது தங்கையுடன் செல்போனில் பேசிவிட்டு, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மடலீனா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ந்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனையில் கொண்டுவரும் அவரது உயிர் பிரிந்துவிட்டது என்று அவர்கள் கூறினர்.
மடலீனா வேலை பார்த்த பள்ளியில் பணி புரிந்து மற்றொரு டீச்சர் சில நாட்கள் முன்னர் தலைமை ஆசிரியரிடம் மடலீனா குறித்து புகார் அளித்துள்ளார். அவர் பிள்ளைகளுக்குச் சரியாக பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்றும், அதனால் தனது மகனை வேறொரு பள்ளியில் சேர்க்கப் போவதாக தலைமை ஆசிரியரிடமே நேரிடையாகப் புகார் அளித்திருக்கிறார். தலைமை ஆசிரியர் மடலீனாவுக்கு ஒரு நாளைக்கு ஏழு வகுப்புக்கள் எடுக்கும்படி நிர்ப்பந்தித்திருக்கிறார். இதனால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த மடலீனா தலைமை ஆசிரியர் பேசிய சொற்களால் மனம் நொந்து போயிருக்கிறார். அழுதபடி வீட்டுக்கு வந்துள்ளார்.
ஃபிரான்சிஸ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் உடல் நலக்குறைவால் அவரால் வேலை பார்க்க முடியவில்லைல். மடலீனா தான் வேலைக்குச் சென்றுள்ளார். மடலீனா மரணம் குறித்து போலீஸிடம் புகார் அளித்த பிரான்சிஸ், இதற்குக் காரணமாக இருந்த தலைமை ஆரிசியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். மடலீனா இறக்கும் போது கடிதம் எதுவும் எழுதியிருக்கவில்லை.