சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுமா ‘புற்றுநோய் மூலிகை’? 

மரு.சோ.தில்லைவாணன்

தொற்றா நோய்களுள் மிகப்பெரிய கூட்டணி என்றால் அது சர்க்கரை வியாதியும், புற்றுநோயும் தான். ஏனெனில் உலக அளவில் சர்க்கரை நோய் முதலிடத்தைப் பிடித்து, இருதய நோய்களுக்கு காரணமாகி, உயிரிழப்பை உண்டாக்குவது போல, அதிக இறப்பை ஏற்படுத்தும் வரிசையில் அடுத்த இடத்தைப் பிடிப்பது புற்றுநோய் தான். 

40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இரண்டு நோய்களும் பெரிதாக பேசப்படவில்லை. அந்த அளவுக்கு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அன்கொன்றும் இன்கொன்றுமாக சொற்ப எண்ணிக்கையிலே புற்றுநோய் பாதிப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று ஆலமரமாய் புற்றுநோயாளர் எண்ணிக்கையும், புற்றுநோய் சார்ந்த சிகிச்சை நிலையங்களும் வளர்ந்திருப்பது பலருக்கும் புரியாத புதிர் தான்.

தற்போதைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவது கூடுதல் வருத்தம். முக்கியமாக சில ஆய்வுத்தரவுகளின்படி, கல்லீரல், கணையம், பெருங்குடல், கருப்பை, மார்பகம், சிறுநீர்ப்பை சார்ந்த புற்றுநோய்கள் உண்டாவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்சுலின் செலுத்திக்கொள்ளும் முதல் வகை நீரிழிவு (டைப் 1) வகையினருக்கு கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் தொற்றா நோய்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. இவைகள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி அமைத்து, உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து மரணத்தை உண்டாக்குவதாக உள்ளன.

நித்தியகல்யாணி

அதில் முக்கியமாக ஆரோக்கியமான பெண்களை விட, நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 27 சதவீதம் அதிகம் என்றும் ஆரோக்கியமான ஆண்களை விட, சர்க்கரை நோயாளி உள்ள ஆண்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு 19 சதவீதம் அதிகம் என்றும், கூடுதலாக நீரிழிவு நோயுடைய ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் ஆபத்து 12 சதவீதம் அதிகம் போன்ற பல புள்ளி விவரங்கள் நம்மை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அந்த வகையில் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய்க்கான கூட்டணியை அறிந்துகொண்டு, ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியம். முதலில் பாரம்பரிய உணவுகளை மறந்தது, உடல் உழைப்பினை ஓரங்கட்டியது, ஆரோக்கியத்தை அள்ளித்தந்த வாழ்வியலை புறக்கணித்தது போன்றவை எல்லாம் தான் இன்றைய தொற்றா நோய்களுக்கு முதன்மைக் காரணிகள் என்பது வெளிப்படை. ‘உணவே மருந்து’ என்று நம்பி வாழ்ந்த வரை தலை தூக்காத இந்த நோய்கள் எல்லாம், மருந்தை மட்டுமே வேளை வேளைக்கு உணவாக எடுத்துக்கொள்ள தொடங்கியவுடன், அதிகமாகும் காரணத்தை ஆராய்ந்தால் நிச்சயம் அச்சம் தரும்.

இவை ஒருபுறமிருக்க, சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் இவை இரண்டையும் ஒரு சேர தடுக்க கூடிய தன்மையுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் மூலிகைகள் சித்த மருத்துவத்தில் அதிகம். இயற்கை நிறமிகள் பலவற்றுக்கும் இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை இருப்பது இயற்கை நமக்களிக்கும் ஆரோக்கியத்திற்கான வரப்பிரசாதம் தான். புற்றுநோயை தடுக்க கூடியதாக மட்டுமின்றி, புற்றுநோய்க்கான மருந்தாக பயன்படுத்தும் சித்த மருத்துவ மூலிகை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது என்பது ஒரே அம்பில் இரண்டு அரக்கர்களை கொல்வது போன்றது. அவ்வளவு மகத்துவம் மிக்க சிறப்பான மூலிகை, ‘புற்றுநோய் மூலிகை’ என்று கருதப்படும் ‘நித்தியகல்யாணி’. 

பலரது வீட்டு வாசலில் கேட்பாரற்று கிடக்கும் இந்த எளிய மூலிகை தான் புற்றுநோய்க்கான மருந்து தேடலில் கை கொடுத்து பலரை காப்பாற்றியது என்று கூறினால் நிச்சயம் வியப்பளிக்கும். அதில் ‘வின்கிரிஸ்டின், வின்ப்ளாஸ்டின்’ ஆகிய இயற்கை வேதிப்பொருள்கள் நவீன அறிவியல் உலகில் பிரித்தெடுக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதில் வின்கிரிஸ்டின் வேதிப்பொருள் சிறுவர்களுக்கு உண்டாகும் இரத்த புற்றுநோயிலும், வின்ப்ளாஸ்டின் ஹாட்க்கின் லிம்போமா எனும் புற்றுநோய் நிலையிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நித்தியகல்யாணி அதில் உள்ள தாவர மூலக்கூறுகளால் புற்றுநோயை தடுப்பதாகவும், புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியதாகவும், கிருமி நாசினியாகவும், புழுக்கொல்லியாகவும், புண்களை ஆற்றுவதாகவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், வயிற்றுப்புண்ணை ஆற்றுவதாகவும் உள்ளது என்று நவீன ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

நித்திய கல்யாணியில் இரண்டு வகையான பூக்கள் உள்ளன. அவை இரண்டுக்குமே மருத்துவ குணங்கள் ஒன்று தான். இதன் இலை மற்றும் பூ இரண்டிலுமே மருத்துவ குணங்கள் உள்ளது. நித்தியகல்யாணி இலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க சர்க்கரை அளவு கட்டுப்படும். அல்லது பூவுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் நற்பலன் தரும்.  அல்லது முழு செடியை வேருடன் பிடிங்கி எடுத்துக்கொண்டு கசாயமிட்டு ஒரு நாள் எடுத்துக்கொண்டு மறுநாள் முதல் இலை அல்லது வேரினை மட்டும் மேற்க்கூறியபடி கசாயமாக்கி எடுத்துக்கொள்வதும் நற்பலன் தரும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். 

சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். எளிமையாக கிடைப்பதால் அதன் மருத்துவ குணம் நமக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆக, சித்த மருத்துவ மூலிகையான நித்திய கல்யாணியை எடுத்துக்கொள்ள நிச்சயம் ஆரோக்கியத்திற்க்கு வழிகோலும். தொற்றா நோய்களை தூர துரத்தும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT