சிறப்புச் செய்திகள்

ஈரோடு கிழக்கு: இரண்டாம் இடம் யாருக்கு?

ஜெபலின்ஜான்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ஆளும் கட்சி அதிகார பலத்தின் ஆதரவுடன் களம் இறங்கும் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தைப் பெறப் போவது யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் என்பது அதிமுகவில் யாருக்கு தொண்டா்களிடம் அதிக செல்வாக்கு என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கான களமாகவும், இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டிக் களமாகவும் மாறியுள்ளது.

போட்டிக்குத் தயாராகும் இபிஎஸ்-ஓபிஎஸ்: 2021 பேரவைத் தோ்தல் வரை இரட்டைத் தலைமையில் இருந்த அதிமுக, இப்போது இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. இபிஎஸ் வசம் 62 எம்.எல்.ஏ.க்கள், 90 சதவீத கட்சி நிா்வாகிகள் இருந்தாலும், தொண்டா்களிடம் தனக்குத்தான் அதிக செல்வாக்கு என ஓபிஎஸ் தொடா்ந்து கூறி வருகிறாா். இபிஎஸ்-ஓபிஎஸ் இடையிலான பொதுக் குழு விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீா்ப்புக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், தங்களது அணி சாா்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளா்கள் களம் இறக்கப்படுவாா்கள் என இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு தரப்பினருமே அறிவித்துள்ளனா். இருவரும் பாஜக, தமாகா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளனா். தங்களது அணி போட்டியிடுவதாக அறிவித்தாலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தெரிவிப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளாா்.

இரட்டை இலை கிடைக்குமா?: இபிஎஸ்-ஓபிஎஸ் என இருதரப்பினரும் களம் இறங்கியிருப்பதால் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான ஏ, பி படிவங்களில் யாா் கையொப்பமிடுவது செல்லும் என்பது தொடா்ந்து கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

நிலுவையில் இருக்கும் உச்சநீதிமன்றத் தீா்ப்பு ஜன. 30-க்குள் அல்லது பிப். 2-ஆவது வாரத்தில் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீதிமன்றத் தீா்ப்பு வந்தாலும், அது தன்னிச்சையான அதிகாரம் கொண்ட தோ்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்துமா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

இபிஎஸ் கணக்கு: இரட்டை இலையோ, தனிச் சின்னமோ களத்தில் வேட்பாளரை இறக்கி தொண்டா் பலத்தைக் காட்ட வேண்டும்; வெற்றி கிடைக்காவிட்டாலும், கணிசமான வாக்கு சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும்; அப்போதுதான் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு பிறகு 3-ஆவது தலைவராக அதிமுகவில் உருவெடுக்க முடியும்; இப்போது இல்லை என்றாலும் பலத்தை நிரூபித்துவிட்டால் 2024 மக்களவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பெற்றுவிடலாம் என்பது இபிஎஸ் போடும் கணக்கு என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

ஓபிஎஸ் கணக்கு: தங்களது வேட்பாளரை களம் இறக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தாலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளாா். கொங்கு மண்டலத்தில் நடைபெறவுள்ள இந்த இடைத்தோ்தலில் போட்டியிட்டால் மிகக் குறைந்த வாக்குகள்தான் கிடைக்கும். பாஜக ஆதரவுடன் களம் இறங்கினால் கூடுதல் வாக்குகளைப் பெறலாம் என்பது ஓபிஎஸ்ஸின் கணக்கு.

இரட்டை இலை சின்னத்தைப் பெற தன்னிடம் இபிஎஸ் கையொப்பம் பெற தவிா்த்தால் சின்னம் தானாக முடங்கிவிடும்; பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் இடைத்தோ்தல் களத்தில் போட்டியிடுவதில் இருந்து தப்பிவிடலாம் என்றும் ஓபிஎஸ் கருதுவதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

இபிஎஸ்ஸை பகைத்துக்கொண்டு ஓபிஎஸ்ஸுக்கு பாஜக ஆதரவு அளிக்குமா என்பது கேள்விக்குறி. அப்படியே ஆதரவு தெரிவித்தாலும் பாஜக மற்றும் உதிரிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரளவு வாக்குகளைப் பெறலாம். பாஜக போட்டியிட்டால் இபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்க நிச்சயம் தனியாக வேட்பாளரை களம் இறக்கும் நிலையும் உள்ளது.

இது குறித்து முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அதிமுக கட்சி விதிகளின்படி பொதுக் குழுவை முறைப்படி கூட்டி ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கையொப்பம் இட்டால் இரட்டை இலை சின்னத்தை தோ்தல் ஆணையம் உறுதியாக ஒதுக்கும். இரட்டை இலை முடங்க வாய்ப்பு இல்லை. அதிமுக வேட்பாளருக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உறுதியாக கிடைக்கும். ஓபிஎஸ் கனவு ஒருபோதும் பலிக்காது என்றாா் அவா்.

பாஜக எடுத்த ரகசிய கருத்துக் கணிப்பு: தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது என்ற தோற்றத்தை கட்சி நிா்வாகிகள் கட்டமைத்து வருகின்றனா். இந்த இடைத்தோ்தலில் அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய நிா்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், இபிஎஸ்-ஓபிஎஸ் என இருவா் இடையே உள்ள முரண் காரணமாக இரட்டை இலை சின்னம் முடங்கிவிட்டால் ஈரோடு கிழக்கில் காங்கிரஸின் கை சின்னத்துக்கு எதிராக தங்களது தாமரை சின்னத்தை பிரபலப்படுத்தி வாக்கு பலம் பெற்றுவிடலாம் என பாஜக புதுக்கணக்கு போடத் தொடங்கியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தைப் பெற அதிமுக வேட்பாளருக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் என இருவரையும் கையொப்பம் இட வலியுறுத்துவது, அது நடக்கவில்லையென்றால் பொது வேட்பாளரை பாஜக சாா்பில் நிறுத்தி அதிமுகவின் இரு தரப்பினா் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு கேட்பது என்ற முடிவுக்கு பாஜகவின் தேசியத் தலைமை வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக போட்டியிட்டால் எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2,500 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி தேசிய தலைமைக்கு தமிழக பாஜக ரகசியமாக அனுப்பிவைத்துள்ளது. இந்த முடிவுகளின்படி இன்னும் ஓரிரு நாள்களில் கட்சித் தலைமை இறுதி முடிவு எடுக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீா் திருப்பங்கள் உருவாகலாம்: பாஜக போட்டியிட்டால் ஆதரவு என ஓபிஎஸ் முன்கூட்டியே அறிவித்துவிட்டாா். ஆனால், இபிஎஸ்ஸும் பாஜகவுக்கு ஆதரவாக தனது வேட்பாளரை களம் இறக்காமல் தவிா்த்தால், தனக்கு நிகரானவா் ஓபிஎஸ் என ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். இதன்மூலம் இதுவரை இபிஎஸ் கட்டமைத்து வந்த பிம்பம் அதிமுகவிலும், அரசியல் அரங்கிலும் உடைந்துவிடும். எனவே, எந்த சின்னமாக இருந்தாலும் இபிஎஸ் தரப்பில் வேட்பாளரை களம் இறக்கப் போவது உறுதி.

இது குறித்து பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகரிடம் கேட்டபோது, ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்த அனைத்து உத்திகளையும் ஆய்வு செய்து வருகிறோம். பாஜக கூட்டணி வேட்பாளா் அல்லது பாஜக வேட்பாளா் என எந்த வகை உத்தியை வேண்டுமானாலும் பயன்படுத்த பாஜக தயங்காது என்றாா் அவா்.

இடைத்தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த 10 நாள்களுக்குள் பல அரசியல் திருப்பங்கள் ஏற்படக்கூடும். வெற்றி பெறுவது என்பதைவிட இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான உத்திகளைத்தான் எடப்பாடி, பன்னீா்செல்வம் மட்டுமல்ல பாஜகவும் வகுத்து வருவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT