சிறப்புச் செய்திகள்

கருத்தரிப்பு விகிதத்தை ‘காமரசி மூலிகை’ மேம்படுத்துமா?

மரு.சோ.தில்லைவாணன்

இன்றைய நவீன நாகரிக வாழ்வியலில் மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். இதனால் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அளவு அதிகமாகி ஆண், பெண் இருவருக்கும் மலட்டு நோயை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மன அழுத்தத்துக்கு காரணமான ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள், உடலில் உள்ள பாலின ஹார்மோன் சுரப்பை பாதித்து பலருக்கும் இல்லற வாழ்வில் இடைவெளியை ஏற்படுத்தி பிரிவினையை உண்டாக்குபவை.

பெண்களுக்கு மாதம் மாதம் மாதவிடாய் சரிவர ஆகவில்லை என்று மருத்துவரிடம் அணுகினாலும் சரி, ஆண்களுக்கு பாலின உணர்ச்சியும், இல்லற வாழ்வில் ஈர்ப்பு இல்லை என்று மருத்துவரிடம் அணுகினாலும் சரி, அவர்கள் தரும் முதல் ஆலோசனை ஸ்ட்ரெஸ் குறைங்க என்பது தான். ஏனெனில் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் காரணமாக, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டோஸ்டீரோன் அளவும், பெண்களுக்கு பெண் ஹார்மோன் எனப்படும் ஈஸ்ட்ரோஜென் அளவும் குறைவது தான் காரணம்.

ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ள கூட முடியாத நவீன பரபரப்பான வாழ்வியல் சூழலில், ஸ்ட்ரெஸ் ஹார்மோனால் மட்டுமல்ல, இயற்கையான பாலியல் உணர்ச்சி என்பது கூட ஆண் பெண் இருபாலருக்கும் இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் இன்று அதிகரித்துள்ளது ‘செயற்கை கருத்தரிப்பு மையங்கள்’ என்று சொன்னால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அறிவியல் வளர்ச்சி என்பது ஒருபுறமிருக்க, ஆதாம் ஏவாள் காதலில் தொடங்கி, இயற்கையாய் நடைபெற்று வந்த கருத்தரிப்பு, என்பது தற்போது நவீன வாழ்வியலில் குறைந்துவிட்டது என்பது வருத்தமளிக்கும் ஒன்று தான்.

அனைவரும் இன்று சாதாரணமாய் எதிர்கொள்ளும் மன அழுத்தம் தான், நம்மை கருத்தரிப்பு மையங்கள் வரை கொண்டு சென்று லட்சக்கணக்கில் விரையம் செய்து இயற்கை உடலை செயற்கை மருந்துகளுக்கு இரையாக்கி பல்வேறு நோய் நிலைகளுக்கு வழி வகுக்கும்.

இதெல்லாம் இருக்கட்டும் டாக்டர், ஆண்,பெண் இருவரின் ஹார்மோன் பிரச்னையையும் சித்த மருத்துவத்தால் தீர்வு காண முடியுமா? என்று பக்க விளைவு இல்லாத, பாரம்பரிய மனம் கமழும் மூலிகை வாசத்தோடு, தீர்வு காண நினைக்கும் அனைவருக்கும் உதவ முன் வரும் சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்று தான் ‘காமரசி’ எனும் ‘நெருஞ்சில்’.

என்னது காலில் குத்தும் நெருஞ்சில் முள்ளுக்கு, தலையில் கிரீடம் சூட்டும் அளவுக்கு மருத்துவ குணங்கள் உள்ளதா? என்று பலருக்கும் ஆச்சரியம் ஏற்படும். ஆம். நெருஞ்சில் முள் என்றாலே பலரும், வீட்டு வைத்தியமாக சிறுநீரக சார்ந்த பிரச்னைகள், கல்லடைப்பு நோய்களுக்கு கஷாயமிட்டு குடிப்பதும், கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.

‘காமரசி’ என்ற பெயரிலே இதன் பெயர்க்காரணத்தை அறியலாம். வெண்ணீர் எனப்படும் ஆண்களின் விந்தணுக்களை கூட்டுவதால், மனதில் காமம் என்று பாலுணர்வை இயற்கையாக அதிகரிக்க செய்வதால் காமரசி என்ற பெயர் வந்ததாக தெரிகின்றது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கு ‘ஓவம்’ எனப்படும் சினைமுட்டையை தூண்டி கருத்தரிப்புக்கு உதவும் வகையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெருஞ்சில் மூலிகையின் காய்ந்த பழம் ‘முள்’ என்று அழைக்கப்படும். நெருஞ்சில் முள்ளில் மருத்துவ குணம் வாய்ந்த ஸ்டீராய்டல் சபோனின்கள், ஃபிளாவனாய்டுகள், ஃபிளவனால் கிளைகோசைடுகள், அல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் உள்ளது. இதில் உள்ள டிகோஜெனின், டியோஸ்ஜெனின், குளோரோஜெனின்,மற்றும் சரசபோஜெனின் ஆகிய வேதிப்பொருள்கள் சபோனின்களில் அடங்கும்.  

மேலும், நெருஞ்சில் முள்ளில் 18-க்கும் மேற்பட்ட, அதிக செறிவுள்ள ஃபிளாவனாய்டுகளை கொண்டுள்ளது.  இலைகள் மற்றும் பழங்களில் இருந்து முக்கிய ஃபிளாவனாய்டுகளான, கேம்ப்ஃபெரால், குர்செடின் கிளைகோசைடுகள், ருடின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு உள்ளது.

நெருஞ்சில் முள்ளில் உள்ள ஸ்டீராய்டல் சபோனின்களில் ஒன்றான ‘ரோடோடியோசின்’ என்ற வேதிப்பொருள், ஆண் மற்றும் பெண் ஹார்மோன் சுரப்பை சரிசெய்யும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. மேலும் உடலில், வளர்ச்சி ஹார்மோன், இன்சுலின் மற்றும் அல்டோஸ்டிரோன் ஆகியவற்றை இயற்கைக்கு மாறாமல் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

நெருஞ்சில் முள்ளில் உள்ள உள்ள ‘புரோட்டோடியோசின்’ என்ற ஸ்டீராய்டல் சபோனின்,  DHEA -ஆக (டீஹைட்ரோ எபியாண்ட்ரோஸ்டிரோனாக) உடலில் மாற்றுவதன் மூலம் இயற்கையான பாலியல் உணர்வை தூண்டி ஆண்மையை அதிகரிப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நெருஞ்சி

நெருஞ்சில் முள்ளில் உள்ள பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த வேதிப்பொருட்களால், சிறுநீரை பெருக்கும் தன்மையும், இதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும்,  சிறுநீரக கற்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், இசிவகற்றியாகவும், கிருமிக்கொல்லியாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், அதிகமான கொழுப்பை குறைக்கும் தன்மையும் உடையது. மேலும் இருதயத்தை வன்மைப்படுத்துவதாகவும்,கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய சீன மருத்துவத்தில் நெருஞ்சில் முள், கண் சார்ந்த நோய்கள், உடல் வீக்கம், வயிறு வீக்கம், விந்தணுக்கள் தன்னிச்சையான உமிழ்வு, வெள்ளைப்படுதல் மற்றும் ஆண்மைக் குறைவு ஆகிய சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. செயல்பாடு குறைந்த கல்லீரலை சரிசெய்ய,  முலை வீக்கம், கண் வெண்படல அழற்சி, தலைவலி மற்றும் வெண்புள்ளி நோய்களின் சிகிச்சைக்காக ஷெர்ன்-நாங் பார்மகோபியாவில் (சீனாவில் மிகப் பழமையான மருந்தியல்) நெருஞ்சில்  மிகவும் மதிப்புமிக்க மருந்தாக விவரிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மலட்டினை போக்குவதில் நெருஞ்சிலின் பங்கு அளப்பரியது. இது மாதவிடாய் சுழற்சியின் தொடக்க காலத்தில், FSH-எனும் ஹார்மோன் சுரப்பை இயற்கையாக தூண்டுவதன் மூலம், அண்ட விடுப்பு எனும் ஓவம் வெளியீட்டை (Ovum release) தூண்டி, இயற்கையாக கருத்தரிப்பு விகிதத்தை மேம்படுத்த உதவுவதாக உள்ளது.

அதீத வளர்ச்சி பெற்ற அறிவியலால் இயற்கையாக நடைபெறும் செயல்களை கூட நம்மவர்கள் மறந்து, செயற்கையை நாடி பயன்பெற நினைப்பது கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்யினை தேடி அலைவது போல தான். அதனால் அவர்கள் இழக்கப்போவது பணம் மட்டுமல்ல. இயற்கையான உடல் ஆரோக்கியத்தையும் தான்.

ஆகவே, ஆண், பெண் இருபாலருக்கும் நன்மை பயக்கும், ஹார்மோன் சுரப்புகளை சரி செய்யும் நெருஞ்சில் முள்ளினை நாடினால் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது. மொத்தத்தில் சித்த மருத்துவம் எளிமையான வலிமை வாய்ந்த மருத்துவம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

Related Article

சுகம் தரும் சித்த மருத்துவம்: மீண்டும் ‘ஹார்ட் அட்டாக்’ வராமல் தடுக்கும் ‘சரஸ்வதி மூலிகை’

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘வெந்தயம்’ பித்தப்பை கல் பிரச்னைக்கு தீர்வு தருமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: மாம்பழம் உண்ட மயக்கத்தை ‘மாவிலை’ தீர்க்குமா..?

சுகம் தரும் சித்த மருத்துவம்:  ‘சிறுகுறிஞ்சான்’ வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகளை தடுக்குமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: கோடைக்கேற்ற கனிகள் எது தெரியுமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘கற்கடி’ வெயில் கால ரத்த அழுத்தத்தை குறைக்குமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘அசுவகந்தி’ தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீர் செய்யுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT