சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: மீண்டும் ‘ஹார்ட் அட்டாக்’ வராமல் தடுக்கும் ‘சரஸ்வதி மூலிகை’

மரு.சோ.தில்லைவாணன்

‘ஹார்ட் அட்டாக்’ (மாரடைப்பு) எனும் இருதய நோய் தான் உலகமே அஞ்சி நடுங்கும் மிகக்கொடிய தொற்றா நோய். இன்றைய வாழ்வியல் நெறிமுறைகளால் நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்ட மிக முக்கியமான நோய் இந்த மாரடைப்பு. இருதயம் தான் நம் உடலில் உயிருக்கு ஆதாரமான உறுப்பு. உடலில் உள்ள எந்த உறுப்பும் சிறிது நேரம் ஓய்வெடுத்தாலும், அல்லது நோய் நிலையால் செயல்படாமல் போனாலும் உடலில் உயிர் இருக்க முடியும். ஆனால் இருதயம் என்ற ஒரு உறுப்பு ஒரு நிமிடம் ஓய்வெடுத்தால், ஒட்டு மொத்த உடல் உறுப்புகளுக்கும் நிரந்தர ஓய்வு கிடைத்துவிடும். ஏனெனில் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை செலுத்தும் தன்மை இதற்குண்டு.

இவ்வாறு உடல் முழுவதற்கும் ரத்தத்தை செலுத்தும் இருதயம் செயல்பட அதற்கும் ரத்தம் தேவை தான். இருதயம் இரண்டு முக்கிய கரோனரி ரத்த குழாய்கள் மூலம் அதற்கு தேவையான ரத்தத்தை பெறுகின்றது. இருதயம் என்ற முக்கிய உறுப்புக்கு ரத்தம் செலுத்தும் கரோனரி ரத்த குழாய்கள் மற்றும் அதன் கிளை குழாய்களில் ஏற்படும் அடைப்பே மாரடைப்புக்கு காரணம். 

அதாவது இருதயத்திற்கு தேவைப்படும் ரத்தம் குறைவதன் காரணமாக, மார்பில் வலி, மூச்சு விட சிரமம்,திடீர் வியர்வை ஆகிய மாரடைப்புக்கான குறிகுணங்களை உண்டாக்கும். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு தான் தெரியும் உயிர் பிரியும் வலியும், வேதனையும், பயமும்.

‘டாக்டர் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டண்ட் வச்சிருக்காங்க மருந்து மாத்திரைகளை ஒரு வேளை கூட நிறுத்தக்கூடாது என்று சொல்லி இருக்காங்க, மீண்டும் மாரடைப்பு வந்தால் ரொம்ப சிக்கலாகிடும் என்று எச்சரித்து உள்ளனர். மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்க முடியாதா?’ என்று ஒரு சாராரும், ‘டாக்டர் என் இருதயத்தின் செயல்பாடு குறைந்து விட்டதாம், சாதாரணமாக 55-70% வரை இருக்க வேண்டிய செயல்பாடு எனக்கு குறைந்து உள்ளதாம். என் இருதயத்தின் செயல்பாட்டை மீண்டும் மீட்க முடியாதா? என்று இளமைக் காலங்களில் செய்த தவறை எண்ணி வருந்தி மீண்டும் ஆரோக்கியமாக வாழ துடிப்பவர்கள் மற்றொரு சாரார்.  இத்தகைய இருதய பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா? ஒரு முறை மாரடைப்பு வந்த பின், மீண்டும் வராமல் தடுக்க முடியுமா? என்று வேதனையுடன் கேட்க நினைப்போர், அணுக வேண்டியது 'சரஸ்வதி மூலிகை'யைத் தான். 

வல்லாரை

சரஸ்வதி என்றாலே நம் நினைவுக்கு வருவது கல்விக்கடவுள் என்பது தான் கல்விக்கு பெருந்துணையாக இருப்பது நம் நினைவாற்றல். அத்தகைய ஞாபக என்னும் நினைவாற்றலை அதிகரிக்க நம் அனைவருக்கும் பழக்கப்பட்ட மூலிகை வல்லாரை தான். நினைவாற்றலுக்கு மட்டுமல்ல, தோல் நோய்களான தொழு நோய், ஆறாத புண்கள், போன்ற நோயிலும், குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் போன்ற நோயிலும் இன்றளவும் அதிக பயன்படுத்தப்படுவது இந்த வல்லாரை.

வல்லாரை கீரையின் இலையில் முக்கியமாக ட்ரைடர்பீன், சபோனின்கள் மற்றும் சரஸ்வதியின் அம்சமான ஞாபக சக்தி தரும் வேதி மூலக்கூறுகளான பிரம்மோசைடு மற்றும் பிராமினோசைட் போன்றவை உள்ளது. மேலும், சென்டெல்லாசைடு, டானின்கள், பைட்டோஸ்டெரால்களான கேம்பெஸ்டெரால், சிட்டோஸ்டெரால், ஸ்டிக்மாஸ்டெரால், அமினோ அமிலங்களான அலனைன், அஸ்பார்டேட், குளுட்டமேட், லைசின் மற்றும் ட்ரெயோனைன் போன்றவையும் உள்ளது.

மேலும், வல்லாரை ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள ஃபிளவனாய்டுகள், ஹைட்ரோகோடின் என்ற அல்கலாய்டும், வல்லாரின் என்ற ஒரு கசப்பான மூலக்கூறும் உள்ளது. கொழுப்பு அமிலங்களான லினோலிக் அமிலங்கள், பால்மிடிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் போன்ற பல உடலுக்கு தேவையான அத்தியாவசிய மூலக்கூறுகளை உள்ளடக்கியது. இருப்பினும் இதில் உள்ள ‘ஆசியாட்டிக் அமிலம்’ எனும் வேதிப்பொருள் இருதயத்தை காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

மிகக் கொடிய தொற்றா நோயான இருதய நோய்க்கு ஆபத்துக் காரணிகளாக விளங்குபவை  புகைப்பிடித்தல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பின் அளவு என்பது பலரும் அறிந்ததே. இந்த ஆபத்துக் காரணிகள் தான் இருதய ரத்த குழாய்களில் கொழுப்பின் அடைப்பை உருவாக்கி அத்துடன் பிளேக்குகளின் வளர்ச்சி அதிகரித்து இருதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இதுவே திடீரென ‘மாரடைப்பு’ எனப்படும் ‘இஸ்கீமியா’ மற்றும் ‘கார்டியோமையோபதி’ போன்ற நோய் நிலைகளை உருவாக்கும். இந்த நோய்நிலைகள் இறுதியில் இதய செயலிழப்பு மற்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது.

வல்லாரை கீரை இலையில் உள்ள ஆசியாட்டிக் அமிலம் எனும் ட்ரைடெர்பீன்கள், ரத்த குழாயில் ரத்தம் உறைதலை தடுத்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதாகவும், மேலும், ரத்த குழாய்களில் பிளேக்குகள் உருவாவதை தடுப்பதாகவும், ஏற்கனவே உருவான கொழுப்பு பிளேக்குகளை நிலைநிறுத்தி மீண்டும் மாரடைப்பு எனும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கும் தன்மையுடையதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

ஆகவே, வல்லாரை கீரை எனும் சரஸ்வதி மூலிகையை வெறும் ஞாயபக சக்தி தரும், நரம்புக்கு வலுகொடுக்கும் மூலிகை என்று மட்டும் எண்ணாமல் இருதயம் பாதுகாக்கும் மற்றும், அதிரோஸ்கிளிரோசிஸ் பிளேக் நிலைநிறுத்தும் வல்லாரை கீரை என்று எண்ணி இந்த சித்த மருத்துவ கீரையை பயன்படுத்த தொடங்கினால் உலகே கண்டு நடுங்கும் ஹார்ட் அட்டாக் நோயை, நம் நாட்டு மக்கள் கண்டு அச்சமடையாமல் துச்சமாய் ஓரங்கட்ட முடியும். சித்த மருத்துவம் எனும் நம் நாட்டு பாரம்பரிய மருத்துவம், அறிவியலை விஞ்சியது, ஆயுளை கூட்டுவது.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்: பிரதமர் மோடி

பாரத அன்னை வாழ்க: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர்!

டால்பின்களுடன் ஹன்சிகா!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை: லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!

மோடி கூட்டம்: ஒரே மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT