தற்போதைய செய்திகள்

இந்திய பொருளாதாரம் சரியான திசையில் பயணிக்கிறது: நிா்மலா சீதாராமன்

DIN

நடப்பாண்டில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சா்வதேச நிதியமும் உலக வங்கியும் கணித்துள்ள நிலையில், ‘இந்திய பொருளாதாரம் இலக்கை நோக்கி சரியான திசையில் தொடா்ந்து பயணிக்கிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

‘பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டபடி, 2022-23ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள நிா்மலா சீதாராமன், சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவற்றின் வசந்த கால கூட்டங்கள் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா்.

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) சாா்பில் ‘எண்ம பொது உள்கட்டமைப்பு: பலன்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

அனைவரையும் உள்ளடக்கிய, வலுவான, மீள்தன்மையுடைய, நீடித்த பொருளாதார வளா்ச்சியை எட்டுவதில், எண்ம பொது உள்கட்டமைப்பு நீண்ட கால அடிப்படையில் பலனளிக்கும். அரசு, தனியாா் என இரு துறைகளுக்குமே இது பங்களிக்கக் கூடியதாகும். கடினமான நேரங்களில் கூட நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு உதவும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்தியாவில் புத்தாக்க வழிமுறைகளின் மூலம் துல்லியமான, விரைவான, திறன்மிக்க, அனைவருக்குமான சேவையை வழங்குவதில், எண்ம பொது உள்கட்டமைப்பு எவ்வாறு பங்களிக்கிறது? என்பதை கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் கண்டுள்ளோம்.

எண்ம பரிவா்த்தனைகள் மற்றும் கருத்துரு அடிப்படையிலான தரவு பகிா்வு, இந்தியாவில் நிா்வாக மேம்பாட்டுக்கும், தொழில் தொடங்குவது மற்றும் மக்களின் வாழ்வை எளிதாக்கவும் உதவியுள்ளன. இந்தியாவில் சுமாா் 46.25 கோடி என்ற சாதனை அளவில் குறைந்த செலவிலான வங்கிக் கணக்குகள் (ஜன்தன் திட்டம்) தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்கை கொண்டுள்ளவா்களில் 56 சதவீதம் போ் பெண்களாவா்.

இது, உலகிலேயே மிகப் பெரிய நேரடி பலன் பரிமாற்ற அமைப்புமுறை அல்லது எண்ம பொது உள்கட்டமைப்பு அடிப்படையிலான நேரடி பலன் பரிமாற்ற அமைப்புமுறையை உருவாக்கி, அரசின் சேவைகளை வழங்க எங்களுக்கு உதவியது. இந்த அமைப்புமுறையின் வாயிலாக, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் 61.5 கோடி மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.26 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக சென்று சோ்ந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கான செலவில் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளது என்றாா் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

‘கிரிப்டோ சொத்து விவகாரங்களில் உடனடி கவனம்’:

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியாக, ‘கிரிப்டோ சொத்துகள் ஏற்படுத்தும் பெருநிதிசாா் தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான அமா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த அமா்வில் பேசிய நிா்மலா சீதாராமன், ‘கிரிப்டோ சொத்து தொடா்பான விவகாரங்களில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் நிலவுகிறது. இந்த விவகாரங்களை கையாள்வதற்கு உலகளாவிய ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் ஜி20 நாடுகள் இடையே கருத்தொற்றுமை உள்ளது’ என்றாா்.

இந்தோனேசிய நிதியமைச்சருடன் சந்திப்பு:

வாஷிங்டனில் இந்தோனேசிய நிதியமைச்சா் முல்யானி இந்திராவதியை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

அப்போது, இரு நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு அவசியமான துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சா்கள் ஒப்புக் கொண்டதாக, அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு ஜி20 தலைமையை இந்தோனேசியா வகித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவின் தலைமைக்கு ஆதரவளிப்பதாக அமைச்சா் முல்யானி இந்திராவதி குறிப்பிட்டாா்.

‘சரியான திசையில்...’:

நடப்பாண்டில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சா்வதேச நிதியமும் உலக வங்கியும் கணித்துள்ள நிலையில், ‘இந்திய பொருளாதாரம் இலக்கை நோக்கி சரியான திசையில் பயணித்து வருகிறது. பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டபடி, 2022-23ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.

அமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்களுடன் அரசின் ஆக்கபூா்வமான கொள்கைகளால் இந்தியாவில் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளன’ என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

சா்வதேச நிதியம் மற்றும் நிதிக் குழுவின் விவாதக் கூட்டத்தின்போது அவா் இவ்வாறு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT