டவ்-தே புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள குஜராத்திற்கு ரூ. 1,000 கோடி இடைக்கால நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிதீவிர புயலாக வலுப்பெற்ற ‘டவ்-தே’ புயல், திங்கள்கிழமை இரவு குஜராத்தில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மரங்களும் மின் கம்பங்களும் விழுந்தன. நள்ளிரவில் கரையை முழுமையாகக் கடந்த பிறகு, ‘டவ்-தே’ புயல் வலுவிழந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார்.
அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், குஜராத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரமும் அறிவித்தார்.