அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயலால் குஜராத்தில் சேதமடைந்த பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அதிதீவிர புயலாக வலுப்பெற்ற ‘டவ்-தே’ புயல், திங்கள்கிழமை இரவு குஜராத்தில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மரங்களும் மின் கம்பங்களும் விழுந்தன. நள்ளிரவில் கரையை முழுமையாகக் கடந்த பிறகு, ‘டவ்-தே’ புயல் வலுவிழந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்து வருகிறார். பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் சென்றுள்ளார்.
உனா, டியு, ஜாபராபாத், மஹுவா போன்ற பகுதிகளில் ஆய்வு நடத்திய பின்னர், ஆமதாபாத்தில் நடக்கும் மறுஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.