டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (டவ்-தே) இன்று 17.5.2021 காலை 5.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது டையூவிலிருந்து 160 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல் பகுதியிலிருந்து 140 திசையில் நகர்ந்து இன்று மாலை/இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.
இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் பல இடங்களில் அதீத கனமழை, பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரிடம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மேலும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.