தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு 3 நாள்களில் சரி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகாசி மாவட்டம் செங்கமலநாச்சியார்புரம் பகுதியிலுள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசின் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழகம் முழுவதும் 3 நாள்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவை 3 நாள்களில் சரிசெய்யப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும். அதுமட்டுமல்லாது, நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 டன் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தொழில் துறை மற்றும் சுகாதாரத் துறையும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், ரெம்டிசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால், யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கம் தென்னரசு கூறினார்.