தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கடந்த ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, இன்று முதல் மே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும், ஊரடங்கின் போது பிற்பகல் 12 மணிவரை காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுதவிர, தேவையில்லாமல் வெளியே வந்தால் அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.