சென்னையில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று குறைந்ததையடுத்து முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் தவிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 500க்கும் மேல் அதிகரித்துள்ளது.
சென்னையில் 150 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 240க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை தி நகரில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நடத்திய சோதனையில் முகக்கவசம் அணியாத 20க்கும் மேற்பட்டோரிடன், பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ. 200 அபராதம் விதித்தார்.
இதை தொடர்ந்து சென்னையின் முக்கிய சாலைகளான ஜி.எஸ்.டி. ரோடு, அண்ணா சாலை பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 13 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.