அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறையில் இருந்து கடந்த மாதம் வெளிவந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அரசியலை விட்டே விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா அவர்கள் கூறியபடி இன்னும் நூற்றாண்டுகளுக்கு மேலாக, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும்.
என்மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.