மேற்கு வங்க ஆளுநர் பாஜகவின் மாநில தலைவர் போல் செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு திரிணமூலில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த பலர் மீண்டும் திரிணமூலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கார் நியமிக்கப்பட்டதில் இருந்தே திரிணமூல் காங்கிரஸ் அரசுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது.
இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த குணால் கோஷ் கூறியதாவது,
ஆளுநர் ஒரு பாஜக உறுப்பினரைப் போல செயல்பட்டு, மாநில அரசை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார். பாஜக செய்யும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டார். அவர்கள் மக்களின் முடிவை ஏற்கவில்லை. சட்டப்பிரிவு 355 அல்லது 356-ஐ பயன்படுத்தி ஊடுருவ முயற்சி செய்கிறார்கள்.
ஆளுநர், பாஜகவின் மாநில செயல் தலைவர் போலவும், ராஜ் பவன் பாஜக அலுவலகமாகவும் மாறிவிட்டது. ஆளுநரின் வேலை குறித்து மம்தா பானர்ஜி ஏற்கனவே பிரதமருக்கு இரண்டு, மூன்று கடிதங்களை எழுதியுள்ளார்.
மேலும், திரிணமூலில் இருந்து பாஜகவில் இணைந்த தலைவர்கள், பாஜகவில் தொடர்ந்து செயல்பட விரும்பவில்லை. குறைந்தது, பாஜகவின் 8 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் திரிணமூலில் தொடர்பில் உள்ளார்கள். அவர்கள் குறித்த இறுதி முடிவை மம்தா எடுப்பார் எனத் தெரிவித்தார்.