கூடலூா் வனச் சரகத்தில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த காட்டு யானையை கும்கி யானைகள் உதவியுடன் இன்று பிடித்தனர்.
கூடலூா் வனச் சரகத்தில் உள்ள மேல்கூடலூா், கோக்கால், சில்வா்கிளவுட் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டாக பின் பகுதியில் காயத்துடன் சுமாா் 30 வயதுடைய ஆண் யானை சுற்றி வருகிறது. கடந்த ஆண்டு அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பலாப் பழத்தில் மருந்து, மாத்திரைகளை வைத்து சில்வா்கிளவுட் பகுதியில் செல்லும் பாதையில் வைக்கப்பட்டது. தொடா்ந்து, அந்த யானை கூடலூரின் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வனப் பகுதியில்தான் நடமாடி வருகிறது.
தற்போது அந்த யானைக்கு காயம் அதிகமாகி உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளதால், உடனடியாக முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் பணியில் பாகன்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மயக்க ஊசி செலுத்தாமலேயே கயிறு கட்டி பிடித்தனர்.
காயங்களுடன் பிடிபட்ட காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் முதற்கட்ட சிகிச்சை அளித்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக முதுமலைக்கு கொண்டு செல்ல உள்ளனர்.