தில்லி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தில்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சென்னை சிபிசிஐடி தனிப்படையினர் விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லி வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை தில்லி காவல்துறையினர் கைது செய்து, தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தில்லி நீதிமன்றத்தி ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல நீதிபதிகள் அனுமதி வழங்கியதையடுத்து இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை அழைத்து வரவுள்ளனர்.