மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் இரண்டு மாத குழந்தைகளுக்கு முதன் முறையாக புதிய வகை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை பிறந்து இரண்டு மாதமான குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜூகேட் எனும் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட்டு வந்தது.
தற்போது இந்த தடுப்பூசி தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குழந்தைகளுக்கு செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் மானாமதுரை, இளையான்குடி,திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதன் மூலம் குழந்தைகளுக்கு நிமோனியா என்ற சுவாசக்களாறு நோய் முற்றிலுமாக குணப்படுத்த படுவதோடு மேலும் பல வகை வைரஸ் காய்ச்சலை தடுக்கும் திறன் கொண்டதாக நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செயல்படும்.
மேற்கண்ட ஒன்றியங்களில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும். மேலும் கிராமப்புறங்களில் களப்பணியில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும் இந்த தடுப்பூசி போடப்படும்.
பிறந்து 6 ஆவது வாரத்தில் முதல் தவணையும் 17 வது வாரத்தில் இரண்டாவது தவணையும் 9 ஆவது மாதத்தில் மூன்றாவது தவணையுமாக இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.