நாட்டில் இதுவரை 23.28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. நேற்று வரை நாடு முழுவதும் 20.39 லட்சம் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணிவரை நிலவரப்படி 2,99,299 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று ஒரே நாளில்(மாலை 6 மணி நிலவரப்படி) 2,99,299 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் இதுவரை மொத்தம் 23,28,779 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும், உயிரிழப்பிற்கான காரணம் கரோனா தடுப்பூசியுடன் தொடர்புடைய பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.