தில்லியில் உள்ள அமெரிக்க அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர்.
மேலும், தில்லியில் பல்வேறு இடங்களில் காவல்துறையில் தடுப்புகளை உடைத்தெறிந்து உள்ளே நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது.
இதனையடுத்து தில்லியில் உள்ள அமெரிக்க அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில்,
தில்லி காவல்துறை மற்றும் விவசாயிகளுக்கு இடையே தில்லியின் சில பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அரசு ஊழியர்கள் மோதல்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் பகுதிகளுக்கு செல்வதை வேண்டும், மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.