ஹரியாணாவில் சட்டம், ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர்.
மேலும், தில்லியில் பல்வேறு இடங்களில் காவல்துறையில் தடுப்புகளை உடைத்தெறிந்து உள்ளே நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்தனர். இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர், ஒரு விவசாயி பலியானார்.
இந்நிலையில் தில்லி எல்லையான ஹரியாணா பகுதிகளில் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை செய்வதற்காக ஹரியாணா முதல்வர் தலைமையில் இன்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய முதல்வர் கூறியதாவது,
அனைத்து காவல் ஆணையர், துணை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.