அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்ட பழங்கால அம்மன் சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
திருச்சுழி பெரியகண்மாய்க் கரையோரம் நீரில் பாதி மூழ்கிய நிலையில் பழங்கால கற்சிலை கிடப்பதாகஅப்பகுதியில் ஆடுமேய்ப்பவர்கள் கண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வருவாய்த்துறைக்குத் தகவல் கொடுத்ததில் வட்டாட்சியர் தன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அச்சிலையை கரைக்குக் கொண்டு வந்து பார்த்ததில், அது பழங்கால அம்மன் சிலை என்பதும், பலகாலமாக மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் கடந்த வாரங்களில் பெய்த தொடர்மழைக்கு வெள்ளநீரில் அடித்துவரப்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்தது.
மேலும் இச்சிலை அப்பகுதி கிராமத்தினர் சிலரால் கண்மாயில் வைத்து கும்பிட்டு வந்த நிலையில் காணல்போயிற்றா, அது இச்சிலைதானா எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அச்சிலையை விருதுநகர் அரசு அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று ஒப்படைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.