மகாராஷ்டிரத்தில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் தொடங்கும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வியாழக்கிழமை அறிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு அளிக்கப்பட்ட தளர்வை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.
மகாராஷ்டிர மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது,
12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் மே 29 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 31 வரையிலும் நடைபெறும்.
அதற்குமுன், 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 22 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 9 முதல் 28 வரையிலும் நடைபெறும்.
பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் வெளியிடப்படும்.
பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக மாநிலம் அரசு ஏற்கனவே 25 சதவீதத்தை குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.