சிறையில் இருந்து விடுதலையாக உள்ள சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பாஜக வற்புறுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எங்களுக்கான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம். வெற்றிபெறும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு தர கூடாது என உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது அவருடைய கருத்து அதற்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை. கூட்டணிக்கு எது நன்மை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்.
சிறையில் இருந்து விடுதலையாக உள்ள சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பாஜக வற்புறுத்துவதாக தகவல் வருகிறது. அதிமுகவில் யாரை சேர்க்க வேண்டும் என வேறு கட்சி முடிவு செய்யும் நிலையில் தான் எம்ஜிஆர் துவங்கிய அதிமுக உள்ளது. சசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது என்றார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.