மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள கோவேக்சின் தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்துவதற்கு கர்நாடக மருத்துவர்கள் சங்கம்(கே.ஏ.ஆர்.டி.) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் முதற்கட்டப் பணி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கர்நாடகத்தில் மருத்துவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு கர்நாடக மருத்துவர்கள் சங்கம்(கே.ஏ.ஆர்.டி.) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மருத்துவர்கள் சங்க(கே.ஏ.ஆர்.டி.) தலைவர் கூறுகையில்,
கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவேக்சின் இன்னும் மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளது. இருப்பினும் கர்நாடகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது.
எந்த தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.