நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி போடும் முதற்கட்டப் பணியை கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 1.30 கோடிக்கும் அதிகமான முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு அதிகமானோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோ-வின் செயலியில் இரண்டாம் கட்டத்திற்கு ஏற்ப புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதால் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்கள் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.