நாட்டில் உள்ள அனைத்தையும் மோடி அரசு விற்று வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல் விலையுயர்வைக் கண்டிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டரி பொருத்தப்பட்ட மின்னணு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
அந்த நிகழ்வில் மம்தா பேசுகையில்,
எரிபொருள்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். மோடி அரசு நாட்டில் உள்ள அனைத்தையும் விற்பனை செய்கிறது. பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரசு, மக்கள் எதிர்ப்பு, இளைஞர் எதிர்ப்பு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு அரசாங்கமாக உள்ளது என பேசினார்.