இந்திய - பாகிஸ்தான் எல்லை பிரச்னைகள் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்த விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனால் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் பலியாகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில், இரு நாட்டை சேர்ந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் தரப்பில் பிப்.22 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் பிற பிரச்னைகள் குறிந்து இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்து, வெளிப்படையாக கலந்துரையாடினர்.
எல்லைகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை உறுதி செய்ய இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், பிப்ரவரி 24 நள்ளிரவு முதல் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளை பின்பற்றுவதை உறுதி செய்துள்ளனர்.