தில்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணாவை சேர்ந்த விவசாயிகள் கடந்த 135 நாள்களாக தில்லி எல்லைகளில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 11 முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதே கோரிக்கையாக வைக்கப்படுவதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் இன்று கூறியதாவது,
பல விவசாயிகள் சங்கத்தினர், பொருளாதார வல்லுநர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சில விவசாயிகள் மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இதுவரை 11 கட்டப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களில் சிக்கலான பகுதிகளை விவாதித்து, அதில் மாற்றத்தை கொண்டுவர நாங்கள் முன்வந்தோம். ஆனால் விவசாய சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கான காரணத்தையும் கூறவில்லை.
தற்போதைய கரோனா பரவலை கருத்தில் கொண்டு குழந்தைகள் மற்றும் முதியவர்களை வீட்டிற்கு திரும்ப சொல்லி பல முறை விவசாய சங்கத் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். தற்போது கரோனா இரண்டாம் அலை பரவி வருவதை கருத்தில் கொண்டு, நெறிமுறைகளை பின்பற்றி போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். மத்திய அரசுடன் கலந்துரையாட முன்வர வேண்டும் எனக் கூறினார்.