சென்னை: சென்னை விமான நிலைய அயல்நாட்டு தபால் முனையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.
இது தொடா்பாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை ஆணையா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், நெதா்லாந்திலிருந்து வந்த இரண்டு பாா்சல்களில் போதைப்பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பாா்சல்களை பிரித்து பாா்த்தபோது, ரூ.5 லட்சம் மதிப்பிலான 165 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும், அந்த பாா்சல் அனுப்பப்பட்ட சென்னை மற்றும் திருப்பூா் முகவரிகள் போலியானவை என சுங்கத் துறையினா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.