தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாதில் 6 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் மாநகரப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் 22 அன்று போடப்பட்ட பொது முடக்கத்தில் இருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொற்றின் பரவல் குறைந்ததை அடுத்து இன்று முதல் ஹைதராபாதில் பேருந்து சேவை தொடங்கியது.
இதுகுறித்து மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் பி. அஜய் கூறுகையில்,
தொற்றின் பரவல் குறைந்ததை அடுத்து ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் 25 சதவீத பேருந்து சேவையை முதற்கட்டமாக இன்று தொடங்கியுள்ளோம், மேலும் தற்போதுள்ள சூழ்நிலைப் பொறுத்து சேவைகள் அதிகப்படுத்தப்படும்.
ஹைதராபாத் பெருநகரத்தில் உள்ள 2,900 பேருந்துகளில் 650 பேருந்துகள் மட்டும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலம் தினக்கூலி மற்றும் பணிகளுக்கு செல்வோர்கள் சென்றுவர உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.