தாணே குடியிருப்புக் கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரில் 3 மாடி குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவம் நடந்த அன்று 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் சுமார் 150 பேர் வரையில் வசித்து வந்துள்ளனர். தாணே நகரிலிருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிவாண்டி நகரில் அமைந்திருந்த இந்த மூன்று மாடிக் கட்டடம், திங்கள்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு குடியிருப்புவாசிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இடிந்து விழுந்தது.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை இன்று மாலை வெளியிட்டுள்ள தகவலில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து 3வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.