ஸ்ரீபெரும்புதூர்: அடையாறு ஆற்றில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா அதிகாரிகளுடன் செவ்வாய்கிழமை ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆதனூர், வரதராஜபுரம், முடிச்சூர், உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் குடியிறுப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க சுமார் 500 கோடி மதிப்பீட்டில், அடையாறு ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும் அடையாறு கிளைக்கால்வாய்களும் தூர்வாரப்பட்டு கிளைக் கால்வாய்களில் தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து ஒரத்தூர் பகுதியில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் அடையாறு ஆற்றில் கலக்கும் மழைநீரின் அளவு வெகுவாக குறையும்.
மேலும் அடையாறு ஆற்று நீரால் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழாமல் இருக்க அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் கடந்சத சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடையாற்று ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பணை அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியர் பா.பென்னைய்யா ஆதனூர் பகுதியில் இருந்து வரதராஜபுரம் பகுதிவரை சுமார் ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று செவ்வாய்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பா.பென்னைய்யா ஒரத்தூர் பகுதியில் புதிய நிர்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இனி வெள்ள பாதிப்புகள் ஏற்படுவது தடுக்ப்படும் எனவும், வெள்ளத்தடுப்பு பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்ரீதர், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, குன்றத்தூர் வட்டாட்சியர் முத்து, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிபொறியாளர் குஜராஜ், வட்டாரவளர்ச்சி அலுவலர் அப்துல்நயிம்பாஷா உள்ளிட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.