இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 2,120 பாகிஸ்தானியர்கள் உள்பட பல வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
கடந்த மூன்று ஆண்டுகளில் 2,120 பாகிஸ்தான் பிரஜைகள், 188 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் மற்றும் 99 வங்கதேசப் பிரஜைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு முன், 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில், 56 நாடுகளைச் சேர்ந்த 18,855 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இதில், 15,012 பேர் வங்கதேசம், 2,668 பேர் பாகிஸ்தான், 109 பேர் இலங்கை, 665 பேர் ஆப்கானிஸ்தான், 105 பேர் அமெரிக்கா, 40 நேபாளம், 40 இங்கிலாந்து, 23 கென்யா, 21 மலேசியா, 18 கனடா மற்றும் 18 சிங்கப்பூர் ஆகிய நாட்டினர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்தோ-வங்கதேச நில எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, 14,864 வங்கதேசப் பிரஜைகளுக்கு 1955 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 7 ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில், 21,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் இந்திய குடியுரிமையைப் பெற்றதாக தெரிவித்தார்.