மும்பை அருகே 3 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியின் படேல் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 20 பேரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஒரு குழந்தை உட்பட 11 பேரை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். அதில், சிகிச்சைப் பலனின்றி மேலும் 3 பேர் பலியானதால் மொத்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்திற்குள்ளான கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும் கட்டடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.