திருநெல்வேலி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சியினர் கூட்டாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். முன்னதாக, அன்மையில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் ஆறு மாத காலத்திற்கு வழங்க வேண்டும்; விவசாயம் மற்றும் மின்சார திருத்தச் சட்டங்களை திரும்ப பெறவேண்டும்; தனியார் மயமாக்கும் கொள்கையைத்திரும்பப் பெறவேண்டும்; நுண்நிதி மற்றும் வங்கி கடன் திரும்ப பெறுவதை ஓராண்டு காலத்திற்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் பாஸ்கரன் நிறைவுறையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.