கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்ட பேடிஎம் சற்று நேரத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
செல்லிடப்பேசி செயலியாக துவங்கிய பேடிஎம், வங்கிச் சேவையையும் அளித்து, பணப்பரிமாற்றத்தை எளிமையாக்கியது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் சட்டதிட்டங்களை மீறியதாக பேடிஎம் மீது புகார் எழுந்ததாகவும், விதிமீறல் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு சூதாட்டம் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் மீறியதாக தெரிவித்திருக்கும் கூகுள், நாங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்க மாட்டோம். மற்றும் விளையாட்டு பந்தயத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு வரையறுக்கப்படாத சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம். ஒரு செல்லிடப்பேசி செயலி, அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரை வெளியில் இருக்கும் மற்றொரு வலைத்தளத்திற்கு இட்டுச் சென்றால் அதன் மூலம் பந்தயத்தில் ஈடுபடுத்துதல் அல்லது பணப் பரிசுகளை வெல்லலாம் என்று கூறி ஆன்லைனில் விளையாட வைத்தல் அல்லது பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தால், அது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பேடிஎம் நிர்வாகம் கூகுள் நிர்வாகத்திடம் பேசியதையடுத்து நீக்கிய சற்று நேரத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
மேலும், இந்தத் தகவல் பேடிஎம் உபயோகிப்பவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Update: And we're back!