காஞ்சிபுரம் தனியார் அசைவ உணவகத்தில் உணவருந்திய 30க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் காமராஜர் வீதி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அசைவ உணவகத்தில் புதன்கிழமை இரவு அசைவ உணவு வாங்கி சாப்பிட்டவர்களில் 30க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு ரயில்வே சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரேநேரத்தில் ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதில் அனைவரும் தனியார் அசைவ உணவகத்தில் அசைவ உணவுகளை வாங்கி சாப்பிட்டது தெரியவந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் வாந்தி, பேதி, காரணமாக அனுமதிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அசைவ உணவகத்தில் வியாழக்கிழமை மதியத்தில் இருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.