மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் பாஜகவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடினர்.
பாஜக போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக்கூறி விசிகவினரை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே ஆட்சியர் அலுவலகத்துக்கு பாஜகவை சேர்ந்த சிலர் காரில் வந்தனர். அதையடுத்து அங்கு சென்ற விசிகவினர் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை தடுக்க முயன்றபோது இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் விசிகவினர் 50 பேரை காவல்துறை கைது செய்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.