கும்மிடிப்பூண்டி அருகே தனிப்படை காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.23 கோடி பணம், 9 கிலோ வெள்ளி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருஞானசம்பந்தம் தலைமையில் தனிப்படை காவலர்கள் வியாழக்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த காரை காவல்துறையினர் மறித்து சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் காரில் இருந்த 3 பேர் கட்டுக்கட்டாய் பணம் வெள்ளி நகைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் அந்த காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 3 பேரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில் காரில் இருந்த மாதவரம் ஹைரோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அசோக் (வயது 40) என்பவர் வைத்திருந்த பையில் 6 லட்சம் ரூபாய், 9 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சீராலா பகுதியை சுப்பராவ் மகன் சதீஷ்குமார் (38) என்பவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த காதர்பாஷா மகன் ரஹ்மானிடம் 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கண்ட மூவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 1 கோடியே 23 லட்சம் ரூபாய் மற்றும் 9 கிலோ வெள்ளியை காவல்துறையினர் பறிமுதல் செய்து மேற்கண்ட மூவர் மற்றும் கார் ஓட்டுநரான ஷேக் அன்வர் (28) என்பவர் ஆகிய 4 பேரையும் ஆரம்பாக்கம் காவலர்கள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் கணக்கில் வராத 1 கோடியே 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.