உத்தரபிரதேசத்தில் பப்ஜி விளையாட அனுமதிக்காததால் தந்தையின் கழுத்தை மகன் வெட்டியதாக திங்கள்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீரட் மாவட்டத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜியை அமீர் என்ற இளைஞர் வியாழக்கிழமை விளையாடியுள்ளார். இதைக் கண்ட தந்தை இர்பான் விளையாடுவதில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த அமீர், இர்பானின் கழுத்தை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், தந்தை பலத்த காயமடைந்ததைக் கண்ட அமீர், தன் கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
இந்நிலையில், அமீர் மற்றும் அவரின் தந்தை இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக தகவல் அளிக்காமல், 3 நாள்களுக்கு பிறகே புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி அரவிந்த் மோகன் சர்மா தெரிவித்தார்.
மேலும், அந்த இளைஞர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, பின் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.