சீர்காழி: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கையில் மண்சட்டி ஏந்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் சசிகுமார் (காவேரிபூம்பட்டினம் ஊராட்சி தலைவர்) தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியசாமி (திட்டை), முல்லைவேந்தன் (மணிகிராமம்), சுப்பரவேல் (தில்லைவிடங்கன்), லட்சுமிமுத்துக்குமார் (அல்லிவிளாகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிதியினை அரசு உடனடியாக வழங்க வேண்டும், புதிதாக பதவியேற்ற இதுநாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 7 மாதமாக நிலுவையில் உள்ள மானிய நிதி குழு மானியத்தொகை உடனே வழங்க வேண்டும், ஊராட்சி மன்றங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும், வளர்ச்சி நிதிகளில் மாநில அரசு கட்சி பாகுபாடு காட்டக் கூடாது. குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற மாதமாதம் நிதி வழங்க வேண்டும், ஊராட்சி மன்றத்திற்கு வரக்கூடிய வளர்ச்சி நிதியை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யக்கூடாது, ஊராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தான் மேற்கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மண்சட்டி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா, ரமணிராஜ், பத்மா, சுகந்தி நடராஜன் பங்கேற்றனர்.