மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று (அக்டோபர் 1) முதல் காலவரையறையற்ற ரயில் மறியல் போராட்டத்தை விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த வாரம் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடுமுழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் தொடங்கி விவசாயிகள் என பலதரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டங்களாக வடிவம் பெற்றன.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் கடந்த 7 நாள்களாக பல்வேறு போராட்டங்கள் விவசாய அமைப்பினரால் நடைபெற்று வந்தது.
தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக 31 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் உள்ள ரயில் தடங்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை இன்று முதல் காலவரையறையின்றி நடத்த முடிவெடுக்கபட்டுள்ளதாக பாரதிய கிசான் யூனியன் பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகலன் தெரிவித்துள்ளார்.
காலவரையற்ற போராட்டத்தின் முதல் நாளான இன்று மாநிலம் முழுவதும் 31 விவசாய அமைப்பினர் இணைந்து பி.கே.யு (ஏக்தா உக்ரஹான்), தப்லான் (பாட்டியாலா), சுனம் (சங்ரூர்), புத்லாடா (மான்சா) மற்றும் கிடெர்பாஹா (முக்த்சார்), பர்னாலா, லூதியானா, பதிண்டா உள்பட 21 இடங்களில் ரயில் தடங்களை மறித்து போரட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பா.ஜ.க. தலைவர்களில் வீடுகளுக்கு வெளியேவும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.