தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் முன்னேற்பாடுகள் குறித்து பிரதான் கூறுகையில்,
நிவர் அதிதீவிர புயலாக கணிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு மோசமான சூழலை கையாளும் வகையில் தயாராகியுள்ளோம். கடந்த 2 நாள்களாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 அணிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 30 ஆயிரம் மக்களும், புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரம் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். புயலால் ஏற்படும் சேதங்களை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.