திருச்சி: நிவர் புயல் தாக்கத்தால் திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அதிகம் பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால் அந்த இடங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, திருவரம்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட 11 பகுதிகளில் மிக அதிகம் பாதிக்கப்பட கூடியவை 3, அதிகம் பாதிக்கப்பட கூடியவை 38, மிதமாக பாதிக்கப்பட கூடியவை 41, குறைவாக பாதிக்கப்படக் கூடியவை 72 என மொத்தம் 154 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதினொரு பகுதிகளில், 118 பள்ளிக்கூடங்கள், 5 கல்லூரிகள், 11 சமுதாயக் கூடங்கள், 23 திருமண மண்டபங்கள், 2 பிற இடங்கள் என மொத்தம் 159 இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவர் புயலை எதிர்கொள்ள திருச்சி மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.