திருச்சியில் சரக்கு வேன் மோதி கிராம நிர்வாக அலுவலர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் குமார் (46). இவர் திருச்சி மாவட்டம் சிறுகமணி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். தற்போது ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகர் அண்ணாநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த சில நாள்களாக சேதுராப்பட்டி உள்ள அரசு பொறியியல் கல்லூரி கரோனா தடுப்பு பணிக்கான சிறப்பு முகாமில் பொறுப்பு அலுவலராக உள்ளார். புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். மன்னார்புரம் மின் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது மருங்காபுரியில் இருந்து பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு காவலர் குமார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரான மருங்காபுரி தேனூர் பகுதியைச் சேர்ந்த சேகர்(20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.